வியாழன், 15 மார்ச், 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2 - மேஜர் தி.சா.இராஜூ

                                                           

நோயின் கழிவே நோய்க்கு மருந்து பாகம் 1.

                                                                         -2-
கழிவுப் பொருட்களும் சிறந்த மருந்தாகும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று முன்னரே எண்ணியிருந்தேன்.  அன்பர்கள் தரும் ஊக்கம் அந்தச் செயலை மேலும் விரைவுபடுத்தும்.  ஆழ்ந்து ஆராயப்படுத்த வேண்டிய அறிவியல் துறை இது.

உடலின் கழிவுப் பொருளான மலம், சீழ், சிறுநீர், வியர்வை, கண்ணீர், எச்சில் ஆகியவை அனைத்துமே சிறந்த மருந்துகளாகப் பயன்படும். 
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் பாட்ச் (1880-1936) இது குறித்து நிறையவே சிந்தித்திருக்கிறார்.  அவரை முதலில் ஆங்கிலேயர்கள் போற்றினர்.  பின்னாளில் அவரை எள்ளி நகையாடினர்.  மேதை ஹானிமன் தமது பிறந்த மண்ணில் பணிபுரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  அவர் ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகருக்கு வந்து மருத்துவத் தொண்டாற்றினார்.  பெறும் புகழ் ஈட்டினார்.  இங்கிலாந்துக்கும்  ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் எப்போதும் கடும் பகை.  அதன் காரணமாகவே ஆங்கிலேயர்கள் ஹோமியோபதி மருத்துவத்தைக் குறித்துப் பாராட்ட மறுத்தனர்.  பங்காளிக் காய்ச்சல் உலகில் எல்லைப் பகுதிகளிலும் உண்டு.

பாஸிலினம், டியூபர்குலினம், டியூபர்குலினம் பொவைனம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்டுப் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் புருவங்களை உயர்த்தினார்) மெடோரினம், லூட்டிகம்(சிபிலினம்) ஆகியன குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  சிலர் அதைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.  ஆனால் மார்பிலினம், மாலண்டரினம், கார்ஸினோஸின், ஹைட்ரோபோபினம், இன்ஃப்ளூன்ஸியம், பெர்ட்டுஸின், பெஸ்டினம், பைரோஜன், பாராடோடினம்  ஆகியவை குறித்து நம்மில் பலர் அறியார்கள்.  நம்முடைய மருந்துப் பெட்டிகளில் இவை இல்லை.

அண்மையில் வலிப்பு நோயால் அவதியுற்ற இளைஞர் ஒருவரை அவருடைய தந்தை அழைத்து வந்தார்.  எவ்வளவோ மருத்துவர்களை நாடிப் பெரும் தொகை செலவு செய்து பயன் காணாமல் என்னிடம் வந்தார்.  அவருடைய உடல் நலக் குறிப்பைத் தொகுத்தபோது அவருடைய ஏழாவது வயதில் தாளம்மை வந்த விவரம் தெரிந்தது.  தற்போது தாடைப் பகுதியில் நோவு இருக்கிறதா? என்று வினவினேன்.  எப்போதாவது வருவது உண்டு என்றும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் காய்ச்சல் வருவதாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

பிறகு என்ன? இரண்டு மாத்திரைகள் பாராடோடினம் 200.  தொடர்ந்து ஆறு நாட்களுக்குச் சீனி உருண்டைகள்.

கடந்த இரண்டாண்டுகளில் ஒரு முறை கூட அந்த இளைஞருக்கு வலிப்பு நோய் திரும்பவில்லை.  பாரோடோடினம் வலிப்பு நோய்க்கு மருந்தாகுமா என்று என் சக மருத்துவர்கள் கடுமாக விவாதித்தனர்.

நாம் நமது கண்களையும், செவிகளையும் நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டாமா?ஒரு சுகவீனம் உடலில் ஆழப் பதிந்திருக்கிறது.  அது மீண்டும் அவ்வப்போது தலை தூக்குகிறது என்றால் அது நோயாளியின் சீரான இயக்கத்திற்குத் தடைக்கல்.  அதை நீக்கி விட்டால் அவன் நலம் பெறுகிறான்.  மற்ற முறையினர் இதை மறுக்கலாம்.  ஆனால் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

தாளம்மை குறித்து கல்கி வார ஏட்டில் சுவையான விவாதமே நிகழ்ந்தது.  அது ஒரு நோய்க்கிருமியினால் ஏற்படுகிறது என்று ஆங்கில மருத்துவர் ஒருவர் எழுதினார்.  நோய்க்கிருமிகளினால் ஏதும் ஏற்படாது.  ஏற்றவர் உடலில் நோய் அமைந்து கொள்ளுகிறது.  அதைத் துப்புரவு செய்ய நுண்ணுயிர்கள் வருகின்றன (கெண்ட் பேருரைகள் பக்.51) என்று நான் திருப்பிக் கொடுத்தேன்.  கல்கி பத்திரிகையினால் இதைச் செரித்துக் கொள்ள இயலவில்லை.  அதன் ஆசிரியரே அல்லோபதி மருத்துவம் பயின்றவர், விவாதத்தை வளர்த்தாமல் முடித்து விட்டார்.

நான் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு கழிவுப் பொருள் குறித்துக் கூற விழைகிறேன்.  அது பாஸிலினம்.  இதைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஜே. காம்ப்டன் பர்னட் காசநோயால் பீடிக்கப்பட்டவரின் எச்சிலிலிருந்து (கோழை) இது தயாரிக்கப்படுகிறது.  அடிக்கடி தடுமன் பிடிக்கிறது என்று தாயார் குறை கூறுவார்.  ``ப்ரைமரி காம்ப்ளெக்ஸ்’’(PRIMARY COMPLEX) என்று கூறி ஊசி போட்டுத் துளைப்பார்கள்.  குழந்தைகள் என்னைக் கண்டால் தாவி ஓடி வரும்.  நான் மீட்டா கோலி அங்கிள் (இனிப்புருண்டை தருபவர்).

சாதாரணத் தடுமன், இருமல், காய்ச்சல் ஆகியவைகளுக்குக் குறிகளை அனுசரித்து மெர்க்யூரியஸ், பாடியாகா, ஆர்ஸனிக்கம் ஆல்பம், பெட்ரோலியம் ஆகியவற்றில் ஒன்றைத் தருவேன். இவை வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவைகள்.  இந்தக் கொத்தில் எதைத் தர வேண்டும் என்று யோசித்தே செயல்படுவேன் என்றாலும் எந்தப் பிரிவாக இருந்தாலும் இடையூடாக இரண்டு மாத்திரை பாஸிலினம் தரலாம்.  தர வேண்டும் என்பதே எனது பரிவுரை.   ஏனெனில் இது காச நோய்ப் பிரிவைச் சேராதவர்களுக்கும் நிவாரணம் தருகிறது என்று போயரிக் (பக்.101) எழுதுகிறார்.  ஆனால் இதை மறுமுறை தர வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.   இந்த மருந்தை ஒரு வார இடைவெளியில் கொடுத்தேன்.  அவருடைய பரம்பரையில் காச நோய் இருந்தது.  அவர் கடும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றினால் அவதிப்பட்டார்.  அவருடைய சளி வற்றி விட்டது.  இருமல் அறவே இல்லை.  காய்ச்சலும் அருகி விட்டது.  ஆனால் அவருடைய உடல் முழுவதும் வட்ட வட்டமான தடிப்புகள், மோதிர வளையம் போல கண் இமைகள் கூடப் பாதிக்கப்பட்டிருந்தன.  நான் உண்மையிலேயே பயந்து போனேன்.

நோயுற்றவரின் சுற்றத்தார் என்னைக் கடுமையாகச் சாடினார்கள்.  காச நோய் சருமத்தின் மூலமாக வெளிப்படக்கூடும் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

வங்காளத்தில் புகழ் பெற்ற மருத்துவர் கூறக் கேட்டிருக்கிறேன்.  ஒன்று ஆஸ்துமா அல்லது எக்ஸிமா ஏதாவது ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  வேறு வழியில்லை.
தொடக்கக் காலத்தில் நான் இதை நம்பியிருந்தேன்.  பின்னாளில் என் முடிவுகள் வேறு மாதிரியாகி விட்டன.  ஒரு சுகவீனம் அது நீக்கப்படக்கூடியதாக இருந்தால் முறையான ஹோமியோபதி மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும்.  மண்ணீரல், கணையம், ஆகியவைகள் நிரந்தரமாப் பழுதாகிவிட்டால் அப்போது சுவரில் முட்டிக் கொண்டு பயனில்லை.  நாம் நோயாளிக்கு உபசாந்தியாக ஏதாவது மருந்து கொடுத்து அவனுடைய துயரங்களைத் தணிக்கலாம்.  நிரந்தரமாகக் குணப்படுத்த இயலாது.  இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  மிகுந்த பொறுமை, கவனிப்பு, உழைப்பு ஆகியவை தேவை.  இவை எத்தனை பேரிடம் இருக்கிறது?  நோயாளி நம்பிக்கை இழந்து விடுகின்றானே? 

அவனுடைய சுற்றத்தார்களின் தாக்குதலை மருத்துவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?  நாம் நமது எல்லைகளைத் தெரிந்து கொண்டு வரையறுத்து அதற்குள் வட்டாட வேண்டும்.

இந்த நோய்க் கழிவுப் பொருட்கள், நோயைத் தவிர்க்கும், கட்டுப்படுத்தும், சீராக்கும் அவற்றை அளவோடு பொறுமையுடன் கையாண்டோமானால் . . . 

*****
நோயின் கழிவே நோய்க்கு மருந்து தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக